13-வது ஐ.சி.சி. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் லீக் ஆட்டங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. 12-ம் தேதியுடன் லீக் போட்டிகள் முடிவடைந்தன.
லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் புள்ளிபட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
2 நாள் ஓய்வுக்கு பிறகு முதல் அரையிறுதி போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. அரையிறுதி ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியா- நான்காம் இடத்தை பிடித்த நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் நாக்அவுட் சுற்றான அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
லீக் ஆட்டங்களில் அபாரமாக விளையாடிய இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா அணி 8-வது முறையாக அரையிறுதியில் விளையாடுகிறது. 2 முறை சாம்பியனான அந்த அணி 4-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழையும் வேட்கையில் உள்ளது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் 18 ரன்னில் இந்திய அணி தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதற்கு இன்றைய அரையிறுதி போட்டியில் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த மாதம் 22-ந்தேதி தர்மசாலாவில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்திசாயத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. கடைசியாக இரு அணிகள் இடையே நடந்த 5 ஒருநாள் போட்டியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இதனால் இந்தியா அணி நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் நம்பிக்கையுடன் விளையாடும். மேலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் கூடுதல் பலமாகும். இந்த தொடரில் மும்பையில் நடந்த இலங்கைக்கு எதிரான லீக் பேட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர்.
அதே நேரத்தில் நியூசிலாந்தும் அபாரமாக விளையாடக் கூடியது. நியூசிலாந்து அணி கடந்த காலங்களில் நாக்அவுட் சுற்றில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளது. இதனால் இந்திய அணி எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். அரையிறுதி என்பதால் நெருக்கடி கூட ஏற்படும். இதனால் கவனமுடன் ஆடுவது அவசியமானது.
இறுதிப்போட்டிக்குள் நுழைய இந்தியாவும், நியூசிலாந்தும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.