உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் 2-வது அரையிறுதி போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 49.4 ஓவர் முடிவில் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் டேவிட் மில்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் டேவிட் மில்லர் 101 ரன்களும், கிளாசன் 47 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 3 விக்கெட்களும், ஹேசில்வுட், ஹெட் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்மித் 30 ரன்களும், வார்னர் 29 ரன்களும் எடுத்து அவுட்டாகினார். கடைசியில் போராடிய இங்கிலிஸ் 28 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 47.2 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி வரும் ஞாயிறன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.
மேலும், இது போன்ற செய்திகளை அறிய https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/sports/ கிளிக் செய்யவும்.