மனிதனின் பசியை உணர்ந்து, யார் உதவினாலும். அவர் கடவுளுக்கு சமம்தான், கோவை மக்களின் பசியை போக்கிய மாமனிதன் திரு.சுப்பிரமணியம் அவர்கள் காலமானார் என்ற செய்தி கோவை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்” என “மஹாபாரதத்தில்” கர்ணனை குறிப்பிடுவதுபோல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னுடைய முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் பசியையும், மருத்துவ உதவியும் செய்தவர் சாந்தி கியர்ஸ், சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்பிரமணியம்.
கோவையில் `சாந்தி கியர்ஸ்’ என்ற நிறுவனத்தை திரு.சுப்பிரமணியம் கடந்த 1972-ம் ஆண்டு தொடங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பும் கொடுத்து, இயந்திரதிற்கு தேவைப்படும் உதிரி பாகங்களை உற்பத்தி செய்து, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வெற்றி கண்டவர்.
இதை தொடர்ந்து, 1996-ம் ஆண்டு `சாந்தி சமூக சேவை’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கினர். இதன் நோக்கம், அனைவருக்கும் மலிவு விலையில் உணவு மற்றும் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்று தொடங்கி இன்றுவரை மிக குறைந்த விலையில் கொடுத்து வந்தார்.
- இதுமட்டுமின்றி தினம்தோறும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டுவருகிறது.
- இவரது மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் 30 ரூபாய் மட்டும்தான்.
- பல பேருக்கு கல்வி உதவிகளும் செய்துள்ளார்.
- மேலும் இவரது மருந்தகங்களில் எப்போதும் 30 சதவிகிதம் தள்ளுபடியில் தான் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
- கோவை மட்டுமின்றி பல ஊறுகளில் இருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறமுடியாத ஏழை, நடுத்தர குடும்பத்தினர் இங்கு மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும், மருந்துகள் வாங்கவும் அதிக அளவில் வருவார்கள்.
- SSS பெட்ரோல் நிலையத்தில், ஸ்டாக் வரும்போது என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதோ, அந்த ஸ்டாக் முடியும் வரை அதே விலைக்குதான் விற்பனை செய்யப்படும். மற்ற பெட்ரோல் நிலையங்களை விட எப்போதும் விலை குறைவாக தான் இருக்கும். விலை குறைவால் தரத்தில் எந்த ஒரு வேறுபாடும் இருக்காது.
- சாந்தி சமூக சேவை அமைப்பால் இலவச மின்மயானமும் இயங்கிவருகிறது,
இவ்வளவு சேவைகளையும் செய்து அதைப்பற்றி ஊடகங்களில் எந்த ஒரு விளம்பரமும் செய்யாமல். சமூக சேவை செய்வதன்மூலம் தனது முகத்தை வெளியே காட்டக்கூடாது என்ற கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தார். சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (11.12.2020) காலை சுப்பிரமணியம்(78) உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு கோவை மக்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.