நிலம் எங்கேயும் விலை மலிவாக கிடைக்கும் என எதிர்பார்த்து அடிமாட்டு விலைக்கு வாங்க முயற்சி செய்ய வேண்டாம். ஒரு சில ரியல் எஸ்டேட் முதலைகள் ஒரே இடத்தை மூன்று பேருக்கு விற்ற கூத்தெல்லாம் நடந்துள்ளது.
ஒருவருக்கு சொந்தமான நிலம் நம்முடைய கைக்கு வர வேண்டும் என்றால், பணத்தை தாண்டி இன்னும் எத்தனையோ கூறுகளை அலசி ஆராய வேண்டும்.
நிலத்தின் விலை குறைவு என்று நினைத்து வாங்க வேண்டாம். அந்த ஏரியாவிற்கு மார்கெட் மதிப்பு என்னான்னு பார்க்கவும், அடுத்து அரசின் கைடு லைன் மதிப்பு எவ்வளோன்னு பார்க்கவும். பிறகு விலையை நிர்ணயம் செய்யவும்.
அடுத்து இடம் வாங்க முடிவு செய்துவிட்டால், இடத்திற்கு பட்டா, பத்திரம் இருக்கா என்பதை கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும். பட்டா இல்லை என்று சொல்லி வெறும் பத்திரபதிவு மட்டும் செய்துகொள்ள வேண்டாம். ஏனெனில் வங்கியில் லோனுக்கு விண்ணபிக்கும் போது பட்டா இருந்தால் தான் லோன் கிடைக்கும்.
பத்திர பதிவு என்பது வெறுமனே தனியார் சாட்சிகளை வைத்து மேற்கொள்ளப்படும் ஒரு ஆவணம் மட்டுமே. பட்டா தான், அந்த நிலம் நமக்கு சொந்தமானது என்பதை அரசு ஆவணத்தின் மூலம் உறுதிபடுத்தும். ஒரு இடத்திற்கு பத்திரம் மட்டும் இருந்தால், தாய் பத்திரத்தையும் கேட்டு வாங்க வேண்டும்.
நிலம் விற்பவரின் பத்திரம் மட்டும் இருந்தால், சில நேரங்களில் சிக்கல் வரும். பிறகு பத்திரத்தை வைத்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். தற்போது பத்திரப்பதிவு நடந்தாலே, பட்டா மாறுதலும் ஆன்லைனில் நடந்துவிடுகிறது.
வெறும் பத்திரம் மட்டுமே இருந்தால் உடனடியாக பட்டா வாங்க முயற்சிக்க வேண்டும். பட்டா இருந்தால் தான், ஏதாவது காரணத்திற்காக அரசு நிலத்தை கையகப்படுத்தும் சூழ்நிலை வந்தாலும் இழப்பீடு கிடைக்கும்.