நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு "800" என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்க, தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.
இப்படம் குறித்து, அதிகாரப்பூர்வ அறவிப்பு வந்ததை அடுத்து பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, இந்த படத்தின் மோஷன் போஸ்டரை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது.
இது குறித்து கவிஞர் தாமரை, விஜய் சேதுபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதேபோல் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பதிவில், உலகம் முழுவதுமிருந்து இந்த திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என்றும், தங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது என்றும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
@VijaySethuOffl உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது. pic.twitter.com/o0raxEercb
— Cheran (@directorcheran) October 14, 2020
மேலும், இனி எவ்வளவு அட்டகாசமான நடிப்பையும் படத்தையும் நீங்கள் கொடுத்தாலும் சரி. இனி உங்கள் படம் பார்க்க திரையரங்கம் செல்ல மாட்டோம் என இன்று டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஸ்டாக் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனால் டுவிட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹேஸ்டாக் டிரெண்டிங்கில் உள்ளது.
இதையடுத்து அவர் தனக்கு வேண்டியவர்களுடனும் சில இயக்குனர்களுடனும் கடந்த 2 தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். இதையடுத்து அந்தப் படத்தில் இருந்து அவர் விலக இருப்பதாக பேசப்படுகிறது.